மாலத்தீவு சிறையில் தமிழர்கள்: எம்.பிக்களுக்கு கடிதம்
மதுரை:
மாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்களைக் காக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்குமாறு கோரி தமிழகத்தைச்சேர்ந்த எம்.பிக்களுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த அமைதி அறக்கட்டளை அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து அமைப்பின் தலைவர் பால்பாஸ்கர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தைச்சேர்ந்த ராஜன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மாலத்தீவு சிறையில் வாடி வருகிறார்கள். அங்கு அவர்களுக்குபல்வேறு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.
இரு தமிழ் இளைஞர்களையும் மீட்க அனைத்துக் கட்சி எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.நாடாளுமன்றத்தில் இந்த இரு தமிழர்களுக்காகவும் எம்.பிக்கள் குரல் கொடுக்கக் கோருகிறோம்.
எங்களது கடிதத்துடன், ராஜன் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் சேர்த்து கடிதம் அனுப்பியுள்ளோம்என்றார் பால்பாஸ்கர்.
வேலை தேடி மாலத்தீவு சென்ற ராஜன், சரவணன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 3 பேரும் அங்குள்ள ஹெவன்த் தீவுஎன்ற இடத்தில் ஒரு வேலையில் சேர்ந்தனர். அவர்கள் உள்பட 12 பேர் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கடந்த 2002மாவது ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவர்களது அறைக்கு அருகே ஒரு பெண்கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து மாலத்தீவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் ஆகஸ்ட் 29ம் தேதி தமிழர்கள்மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீதும் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது.இவர்களில் போலீஸார் சித்திரவதை தாங்க முடியாமல் சரவணன் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.