நடராஜன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: சிபிஐ திடீர் நடவடிக்கை ஏன்?
சென்னை:
லண்டனில் இருந்து முறைகேடாக லக்ஸஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தன்னை மிரட்டி வரும் நடராஜனை அடக்கி வைக்க துணைப் பிரதமர் அத்வானி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக பரவலாகப் பேசப்படுகிறது.
1994ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது லண்டனைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் யோகேஷ் என்பவர் மூலமாக இந்தக் கார் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தக் காரை சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனும் நடராஜனும் வாங்கினர்.
புதிய கார் என்று சொன்னால் அதிக வரி கட்ட வேண்டும் என்பதால் பழைய கார் என்று சொல்லி இறக்குமதி செய்தனர். இதனால் அரசுக்கு ரூ. 1.6 லட்சம் வரி ஏய்ப்பு செய்தனர். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து அது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த மோசடியில் நடராஜனுக்கு உதவிய வங்கி அதிகாரியான சுஜரிதா சுந்தர்ராஜன் என்பவர் மீதும் வழக்குப் போடப்பட்டது.
நெடு நாட்களாய் கிடப்பில் இருந்த வழக்கில் சிபிஐ சமீபத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜனனி விஷயத்தில் தன்னை அரசு மிகவும் ஒடுக்கி வருவதால், தேர்தலில் போட்டியிடுவேன் என்றரீதியில் மிரட்ட ஆரம்பித்திருந்தார் நடராஜன். இதனால் அவருக்கு செக் வைக்க சமீபத்தில் தன்னைச் சந்தித்த அத்வானி மூலமாக ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.