நீலகிரியில் சசிகலா போட்டியிட வாய்ப்பு
கோவை:
நீலகிரி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போட்டியிடவிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு முதலில் எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பட்ஜெட் முடிவடையும் தருவாயில், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.8 மானியம் அளிப்பதாகவும், இது 4 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மனதில் கொண்டுதான் மத்திய அரசு இந்த மானியத்தை அறிவித்துள்ளது. யார் நின்றாலும், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வென்றே தீரும் என்று கூறினார்.
இந்தத் தொகுதியில் பலமுறை நின்று வென்றவர் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. தனது பண பலத்தால் இந்த முறையும் இத் தொகுதியை அவர் பெற்றுவிடுவார் என்கின்றனர்.
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. வென்ற இந்த நீலகிரி தொகுதியை இம் முறை அக் கட்சிக்குக்து தர முடியாது என ஜெயலலிதா கூறிவிட்டதாக செய்திகள் வருகின்றன. அண்மைக் காலமாக மக்களவைத் தேர்தலில் சசிகலா போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியை அவருக்கு ஜெயலலிதா தேர்வு செய்திருப்பதாக பிரபு ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications