கூட்டணி தலைவர்களுக்கு கருணாநிதி அளித்த டின்னர்!
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு விருந்தளித்தார்.
அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த விருந்து உபசாரம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இரவு விருந்துக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. தேர்தல்உத்திகள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டுள்ளதுமகிழ்ச்சி தருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த களங்கத்தைத் துடைக்க உதவும்.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று பா.ஜ.க.வினர் கூறிக் கொண்டிருப்பது தேவையில்லாதது. அவர்களதுவிஷமத்தனமான பிரசாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.