காங்கிரசுக்கு மீணடும் புதுவை?: சமாதான முயற்சியில் கருணாநிதி
சென்னை:
பாண்டிச்சேரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்குவது தொடர்பாக பா.ம.கவுடன் பேச கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று கருணாநிதியைச் சந்தித்த சோனியா காந்தி வைத்த வேண்டுகோளின்படி இந்தமுயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, பாரம்பரியமான புதுவை தொகுதி ஒதுக்கப்படவில்லை. மாறாகபாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை காங்கிரஸார் கொந்தளித்துப் போயுள்ளனர். இதனால் பா.ம.கவைதோற்கடிக்க அங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவும் தயாராகிவிட்டது.
இதனால் 40 தொகுதி கூட்டணி என்பது 39 தொகுதி கூட்டணியாகக் குறைந்துவிட்டது.
இந் நிலையில் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் காங்கிரசார் மத்தியில் பேசிய சோனியா, 39 தொகுதிகளிலும்திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறிவிட்டு நாக்கைக் கடித்தார்.
அவர் பாண்டிச்சேரி தொகுதியைவிட்டுவிட்டு வெறும் 39யை மட்டும் குறிப்பிட்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும்உற்சாகத்தை ஏற்படுத்தியது. தொண்டர்கள் அரங்கம் அதிர கைதட்டினர்.
அப்போது சிரித்துக் கொண்டே பேசிய சோனியா காந்தி, நான் எண்ணிக்கையை (39 தொகுதிகள்) சொல்லியிருக்கக் கூடாதல்லவாஎன்றார். இல்லை நீங்கள் சொன்னது சரி தான் என்று தொண்டர்கள் மத்தியில் இருந்து குரல் எழுந்தது.
சோனியா பேசி விட்டு மேடையிலிருந்து இறங்கியபோது, அவரை நெருங்கிய புதுவை முதல்வர் ரங்கசாமி, அம் மாநில காங்கிரஸ்தலைவர் நாராயணசாமி, கண்ணன், எம்.ஓ.எச்.பாரூக் ஆகியோர் எப்படியாவது புதுவையைப் பெற்றுத் தாருங்கள், அல்லதுதனித்து நின்றாலும் நம்மால் சிறப்பான வெற்றி பெற முடியும் என்றனர்.
பின்னர் கருணாநிதியைச் சந்தித்த சோனியா அப்போதும் இந்த விவகாரத்தைக் கிளப்பினார். சோனியாவே நேரில் கேட்டுக்கொண்டதால் இது குறித்து டாக்டர் ராமதாசுடன் பேச கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இதில் சமரசம் ஏற்படாவிட்டால் புதுவையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்பதையும் கருணாநிதியிடம் சோனியாகூறியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சேலம் அல்லது மயிலாடுதுறையை பா.ம.கவுக்குத் தரவும், பாண்டிச்சேரியைபா.ம.கவிடம் இருந்து காங்கிரசுக்குத் தரவும் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இதற்கு பா.ம.க ஒப்புக் கொள்ளாவிட்டால் தன் வசம் உள்ள கடலூரை அக் கட்சிக்குத் தந்துவிட்டு காங்கிரசுக்கு பாண்டிச்சேரியைப்பெற்றுத் தந்துவிட்டு, காங்கிரஸ் வசமுள்ள சேலம், மயிலாடுதுறையில் ஒன்றை தனக்கு எடுத்துக் கொள்ளவும் திமுகதிட்டமிட்டுள்ளது.
இதேபோல, நாகர்கோவில் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. டென்னிஸ் மற்றும் தொகுதியைச் சேர்ந்த பல காங்கிரஸ்பிரமுகர்களும் அந்தத் தொகுதியை காங்கிரஸுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரி பேனர்களுடன் வந்திருந்தனர்.இதையடுத்து நாகர்கோவில் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை காங்கிரசார் கேட்பது குறித்தும் கருணாநிதியுடன் சோனியா பேசினார்.
ஆனால், பாண்டிச்சேரி தவிர மற்ற இரு தொகுதிகள் குறித்தும் சோனியா அதிகம் வலியுறுத்தவில்லை.