நாகர்கோவிலில் தனித்துப் போட்டி!
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றுஅப்பகுதி காங்கிரஸார் திடீரென்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புதுவை தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கியதால் புதுவை காங்கிரஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.அதேபோல,ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் தொகுதியான நாகர்கோவில்ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்காததால், தமிழக காங்கிரஸும் அதிருப்தியில் உள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்ற பெருமை இருப்பதால் அதை காங்கிரஸுக்கே ஒதுக்கவேண்டும் என்று அப்பகுதி காங்கிரஸார் மாநில காங்கிரஸ் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை நாகர்கேவில் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் உறுதியான பதிலைத் தெரிவிக்காததால்நாகர்கோவில் பகுதி காங்கிரஸார் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். நாகர்கோவில் தொகுதியை காங்கிரஸுக்குஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம். காங்கிரஸ் சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில்நின்று போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம் என்று நாகர்கோவில் பகுதி காங்கிரஸ் தலைவர்கள்தெரிவித்துள்ளனர்.
வருகிற 17ம் தேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸாரின் கூட்டம் நாகர்கோவிலில்நடைபெறவுள்ளது. அப்போது இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப் போவதாக அவர்கள் பகிரங்கமாகஅறிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி. டென்னிஸ், முன்னாள் எம்.எல்.ஏ.மோசஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ஜெயபால்,மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் என மாவட்ட காங்கிரஸ் தலைமையே கட்சிக்கு எதிராகக்கிளம்பியிருப்பதால் காங்கிரஸ் கட்சியே திவாலாகும் நிலைமை இங்கு ஏற்பட்டுள்ளது.