பா.ஜ.கவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெ: புதுக்கோட்டையை தரவில்லை
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கு 7 தொகுதிகளை முதல்வர் ஜெயலலிதாஒதுக்கியுள்ளார். இதில் புதுக்கோட்டை இடம்பெறவில்லை.
ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:
வட சென்னை, சிதம்பரம் (தனி), தர்மபுரி, நீலகிரி, கோவை, நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரி ஆகியவை. இத்தகவலை ஜெயலலிதா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பா.ஜ.க இடையே கடந்த சில நாட்களாக நடந்து வந்த தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நேற்றுசுமூகத் தீர்வுக்கு வந்தது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும்தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை,நாகர்கோவில் தொகுதிகள் கடந்த முறை பா.ஜ.க. வென்றவையாகும். அந்தத் தொகுதிகள் திரும்பத்தரப்பட்டுவிட்டன.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திருநாவுக்கரசரின் புதுக்கோட்டைத் தொகுதி பா.ஜ.கவுக்கு தரப்படவில்லை.
அதிமுக அறிவித்துள்ள தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி தரும் சில தொகுதிகளும் உள்ளன. வட சென்னை,சிதம்பரம், தர்மபுரி, பாண்டிச்சேரியில் பா.ஜ.க.வுக்கு சற்றும் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.கடந்த முறை திமுக கூட்டணியில் பா.ஜ.க. 6 தொகுதிகளில் போட்டியிட்டது.
இப்போது பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 7 தொகுதிகள் தவிர, மற்ற 33 தொகுதிகளும் அதிமுகபோட்டியிடுகிறது.
இதன் முலம் தமிழகத்திலேயே இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடும் கட்சி அதிமுக தான். திமுகவெறும் 15 இடங்களில் தான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைக்கு கட்டுப்படுவேன்: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை தொகுதியை விட்டுத் தரும் பா.ஜ.க. தலைமையின் முடிவுக்கு, தான் கட்டுப்படுவதாக மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தற்போது டெல்லியில் இருக்கும் அவர், அதிமுக, பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டுள்ளது குறித்தும்மகிழ்ச்சி தெரிவித்தார்.