ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூரில் தனி நீதிமன்ற அமைப்பு பணி தீவிரம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரிலேயேவிசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டதால், தனி நீதிமன்றம் அமைக்கும் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதற்காக கர்நாடக அரசு ரூ. 50 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நீதிமன்றத்துக்கு சிறப்பு நீதிபதியும் நியமிக்கப்பட்டுவிட்டார். புலனய்வுப் பிரிவு பதிவாளரான ஏ.எஸ்.பச்சாபுரேவை சிறப்பு நீதிபதியாக நியமித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெரிசல் மிக்க பெங்களூர் காவேரி பவனுக்கு அருகே உள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவைவிசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாற்று இடமாக பரப்பன அக்ரஹாராவில்உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்திலும் ஒரு கட்டடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அமைப்புப் பணிகளுக்காக ரூ. 50 லட்சத்தை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தை தமிழகம்பின்னர் திருப்பித் தர வேண்டும். வழக்கு தொடர்பான 2,300 ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி பெங்களூரில் நடந்து வருகிறது.
தமிழ் மொழி பெயர்ப்பாளர், இரு கிளார்க்குகள், 3 உதவி கிளார்க்குகள், 2 டைப்பிஸ்டுகள், 2 பியூன்கள், 4பாதுகாவலர்கள், ஒரு டிரைவர் ஆகியோர் இந்தப் பணிக்காக காண்ட்ராக்ட் அடிப்படையில் கர்நாடக அரசுநியமித்துள்ளது.
அதே நேரம் அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வழக்கை நியாயமாக நடத்தும் எண்ணத்துடன்வெளி மாநிலத்தில் இருந்து வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசு முயன்று வருகிறது. ஆனால், சென்னை,மும்பையைச் சேர்ந்த பிரபலமான வழக்கறிஞர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட இதுவரை முன்வரவில்லை.
வழக்குக்காக பெங்களூரிலேயே தங்கி இருக்க வேண்டிய அவசியம் எழும் என்பதால் அவர்கள் யோசிப்பதாகத்தெரிகிறது. இதனால் பெங்களூரின் பிரபல வழக்கறிஞரையே நியமித்துவிட கர்நாடகம் முடிவு செய்துள்ளது.
சென்னை ரிசர்வ் வங்கி பாதுகாப்பில் உள்ள, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து பறிமுதல்செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ள வைர, தங்க நகைகள், வெள்ளித் தட்டுக்கள், 90 கைக்கெடிகாரங்கள், டீலக்ஸ் பஸ் உள்ளிட்ட 2,300 பொருட்களும் பெங்களூர் கொண்டு வரப்படுமா அல்லதுசென்னையிலேயே வைக்கப்படுமா என்பது குறித்துத் தெரியவில்லை.