சின்னப் பசங்க: ரஜினி ரசிகர்கள் குறித்து ராமதாஸ்
மதுரை:
ரஜினி ரசிகர்களை மீசை முளைக்காத சின்னப் பையன்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வர்ணித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
விருதுநகர் திமுக மாநாட்டுக்கு பல லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு போலீசாரே வரவில்லை.
ஆனால், விருதுநகருக்குச் சென்ற எனக்குக் கறுப்புக் கொடி காட்ட மீசை முளைக்காத 10 பையன்களுக்கு (ரஜினி ரசிகர்கள்) காவல்துறையினர் அனுமதி தந்தனர். அந்த 10 பசங்களின் பாதுகாப்புக்கு 70 போலீசார் நின்றிருந்தனர்.
ஆனால், விருதுநகரில் பாதுகாப்பையோ, போக்குவரத்தையோ போலீசார் ஒழுங்குப்படுத்தவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர் வாசனின் கார் போக முடியவில்லை. அவர் 4 கி.மீ. தூரம் நடந்துதான் மாநாட்டுக்கு வந்தார். அதே போல நானும் 6 கிராமங்களை நடந்து போய் கடந்து தான் மாநாட்டை அடைந்தேன்.
ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தான் போலீசும் இருக்கிறது.
வாஜ்பாயிடம் இருந்து நழுவி பா.ஜ.க. இப்போது அத்வானியின் கைக்குப் போய்விட்டது. மத வெறியைக் குறிக்கோளாகக் கொண்ட கும்பல் கையோங்குவதால் இனி பா.ஜ.கவுடன் எந்த காலத்திலும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.