லாரி-டாடா சுமோ மோதல் 2 பேர் பலி-11 பேர் காயம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி மீது புதுமணத் தம்பதிகள் வந்த டாடா சுமோ மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த மணிவண்ணன் (25) என்பவருக்கும், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 22ம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகள் உறவினர்களுடன் டாடா சுமோ காரில் ஆலங்குளத்திலிருந்து செய்யூருக்கு பயணமானார்கள். பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தை நெருங்கும்போது, பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சிமெண்ட் லாரி மீது டாடா சுமோ மோதியது.
இதில் மணமகனின் தந்தை உதிரமாலை (61) மற்றும் மணப்பெண்ணின் உறவினர் ராமசாமி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, பின்பு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.