கலிங்கப்பட்டியில் வைகோ: வாஜ்பாய் மீது கடும் தாக்கு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிறையிலிருந்து விடுதலையான பிறகு முதல் முறையாக இன்று அவரது சொந்த ஊரானகலிங்கப்பட்டிக்குச் செல்கிறார்.
நேற்றிரவு அவர் சென்னையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். அவருடன் பொடாவில்கைதாகி ஜாமீனில் உள்ள 8 மதிமுகவினரும் சென்றனர்.
காலையில் மதுரை ரயில் நிலையத்தில் வைகோவுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்துஅவரை மதிமுகவினர் வரவேற்றனர். பின்னர் மதுரையில் அண்ணா, பெரியார், முத்துராமலிங்கத் தேவர் மற்றும் அம்பேதர்கரின்சிலைகளுக்கு மாலை அணிவித்த வைகோ, தமிழ்நாடு ஹோட்டலுக்குச் சென்றார்.
வழியெங்கும் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டலில் கட்சியினருடன் வைகோ ஆலோசனைநடத்தினார்.
வைகோ பேட்டி:
பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாய், மதவாத சங் பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். இந்த மதவாதக் கும்பல்கள்நாட்டுக்கே பெரும் ஆபத்தானவை. அவர்களை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்போம்.
வாஜ்பாய் மிகப் பெரிய தலைவர் தான். அவரை மதிக்கிறேன். ஆனால், சங் பரிவாரத்துடன் கைகோர்த்துக் கொண்டுவிட்டஅவரை இனி மேல் விட மாட்டோம். அந்தக் கும்பல் நாட்டையே ஆபத்தான பாதையில் இழுத்துச் சென்று கொண்டுள்ளது.
அதிமுக-அத்வானி கூட்டணி என்று என் தலைவர் கருணாநிதி சொன்னதை நான் ஏற்கமாட்டேன். இது வாஜ்பாய்-ஜெயலலிதாகூட்டணி தான். திராவிடக் கலாச்சாரத்தை, தமிழ் உணர்ச்சியை மழுங்கடிக்க முயலும் ஜெயலலிதா கூட்டணியை ஒழித்துக் கட்டவேண்டும்.
மதவாதிகளுடன் சேர்ந்து கொண்டு தமிழகத்திலும் மதக் கலவரத்துக்கு அடிபோடுகிறார் ஜெயலலிதா. மதவாதத்துக்கு தமிழ்க்கலாச்சாரத்தில் இடமே கிடையாது.
மக்கள் இருட்டில் வாழ்கிறார்கள், எந்த நேரமும் மதக் கலவர அச்சத்தில் இருக்கிறார்கள். அதைத் தான் இந்தியா ஒளிர்கிறது என்றுபா.ஜ.கவினர் சொல்கின்றனர்.
தேர்தலுக்குப் பின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பிரதமரைத் தேர்வு செய்வது கடினமான காரியமே இல்லை. இந்தக்கூட்டணியில் பல அறிவாளிகள், சிந்தனையாளர்கள், பல்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள். பிரதமரைத் தேர்வு செய்வது போன்றவிஷயங்களை கருணாநிதி போன்ற தலைவர்கள் கையாள்வார்கள்.
திராவிட இயக்கத்தைக் கட்டிக் காப்பதில் திமுகவுடன் மதிமுக சேர்ந்து போராடும். தமிழ், தமிழன், தமிழ்க் கலாச்சாரம், தமிழ்நாகரீகம் ஆகியவற்றுக்காக எங்கள் கட்சி தன்னை அர்ப்பணிக்கும். ஜெயலலிதாவின் அரசு தான் இதுவரை தமிழகத்தை ஆண்டஆட்சிகளிலேயே மிக மோசமானது.
வாஜ்பாயையே நான் தான் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தினேன் என்று பேசிய ஜெயலலிதா இன்று வாஜ்பாயின்செல்வாக்கை வைத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார். அவரையும், உதவும் வாஜ்பாயையும் விட மாட்டோம்என்றார் வைகோ.
பின்னர் அவர் கார் மூலம் கலிங்கப்பட்டிக்குப் புறப்பட்டார். அவரது காருக்கு முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான கார்கள்,வேன்கள், பஸ்களில் மதிமுக தொண்டர்கள் கலிங்கப்பட்டிக்குச் சென்றனர். வழியில் விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர்ஆகிய இடங்களில் அவருக்கு பிரமாண்ட வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றிரவு கலிங்கப்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.
வைகோ மனு மீது மார்ச் 3ல் தீர்ப்பு:
இதற்கிடையே பொடா வழக்கு விசாரணைக்காக தினசரி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி வைகோதாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 3ம்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று பொடா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், பொடா வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்குவிலக்கு அளிக்க வேண்டும். தனக்குப் பதில் விசாரணையின்போது 2 வழக்கறிஞர்கள்ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்றுமனுவில் வைகோ கோரியுள்ளார்.