பா.ஜ.கவில் ஆலடி அருணா?: திமுகவில் இருந்து விலகல்
சென்னை:
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆலடி அருணா இன்று துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்துப் பேசினார். பா.ஜ.கவில் இணையும் முடிவில் இருக்கும் அவருக்கு வட சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அருணா, பல காலம் அவரிடம் அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் திமுகவுக்கு வந்தார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு திமுகவில் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது.
கருணாநிதியின் மகள் கனிமொழியின் திருமணத்துக்கு நாடார் சமூகத்தில் மாப்பிள்ளை பார்த்ததும் அருணா தான். ஆனால், அந்தத் திருமண பந்தம் முறிந்து போனது வேறு விஷயம். இந் நிலையில் திருச்செந்தூரில் போட்டியிட விரும்பி கருணாநிதியிடம் அருணா சீட் கேட்டு வந்தார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து மாநில பா.ஜ.கவினரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் இணைய முயன்று வந்தார். இந் நிலையில் நேற்று மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணனுடன் அவர் டெல்லி சென்று இன்று அத்வானியை சந்தித்தார்.
அவரை நாடார் சமூகத்தினர் நிறைந்த வட சென்னையில் நிறுத்தலாம் என ராதாகிருஷ்ணன் யோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் பா.ஜ.க. திணறி வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் போலவே பா.ஜ.கவின் பல்வேறு கோஷ்டிகளும் டெல்லியில் தங்கள் செல்வாக்கை வைத்து தொகுதிகளைப் பெற முயன்று வருகின்றன.
சீட் கிடைக்காத இல.கணேசன், எச்.ராஜா, குமாரவேலு ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். வட சென்னை தொகுதியில் வெற்றி சாத்தியமில்லை என்றாலும் அங்கு குமாரவேலு நிறுத்தப்பட வேண்டும் என கணேசன் நினைக்கிறார்.
ஆனால், அந்தத் தொகுதி தனக்கு வேண்டும் என சுகுமாறன் நம்பியார் சொல்கிறார். தனக்கு இந்தத் தொகுதி கிடைக்காவிட்டால் மகளிரணிப் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை வேறு மிரட்டி வருகிறார்.
இந் நிலையில் ஆலடி அருணாவை இறக்கிவிட ராதாகிருஷ்ணன் முயல்கிறார். இப்போது அனைத்து கோஷ்டிகளுமே தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து தொகுதிகளைப் பெற முயன்று வருகின்றன. கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் பிம்பமாக தமிழக பா.ஜ.கவும் மாறி வருகிறது.
காங்கிரசில் சிதம்பரத்துக்கு சீட் இல்லை:
இற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
டெல்லி சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், காங்கிரஸ் தேர்தல் குழு ஆகியவை தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டுள்ளது.
ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை மேலிடம் அறிவிக்கும். சிதம்பரத்துக்கு சிவங்கை தொகுதியைத் தருவது குறித்து சோனியா என்னிடம் ஏதும் பேசவில்லை.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய சோனியா காந்தி வரவுள்ளார் என்றார்.