வெல்லப் போவது யார்? பெரும் குழப்பத்தில் புதுவை!
பாண்டிச்சேரி:
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, புதுவை காங்கிரஸ் மற்றும் பா.ம.க. கட்சிகளில் மட்டுமே இதுநாள் வரைநிலவி வந்த குழப்பம் தற்போது மக்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது. யாருக்கு, யார் ஆதரவு, எந்தவேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் பாண்டிச்சேரி மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு திமுக தூக்கிக் கொடுத்து விட்டதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்காங்கிரஸார். பா.ம.க. போட்டியிடுவதை அனுமதிக்க மாட்டோம், மீறிப் போட்டியிட்டால் தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.
இதைப் பற்றிக் கவலைப்படாமல், பா.ம.க. தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. கடந்த முறை மயிரிழையில்தோல்வியைத் தழுவிய பேராசியர் எம்.ராமதாஸ்தான் மறுபடியும் போட்டியிடுகிறார்.
மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. புதுவை மற்றும் காரைக்கால்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மத்தியில் இவருக்கு ஓரளவு ஆதரவு காணப்படுகிறது. இரு பகுதிகளிலும் உள்ளவாக்காளர்களில் 5 சதவீதம் பேர் மீனவ சமுதாயத்தினர்.
அதேசமயத்தில், புதுவைக்கு உட்பட்ட மாஹே, ஏனாம் பகுதிகளில் பா.ம.கவுக்கு சுத்தமாக ஆதரவு கிடையாது.இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 50,000 ஓட்டுக்களும் அப்படியே காங்கிரஸுக்குக் கிடைக்கும் ஓட்டுக்கள் ஆகும்.இந்தப் பகுதியில் உள்ள ஓட்டுக்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய அளவில் உள்ளதால் காங்கிரஸின்உதவி இல்லாமல் பா.ம.கவால் வெற்றி பெறவே முடியாது.
அதேசமயம், பா.ம.கவின் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கோ அல்லது மதிமுகவுக்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோகூட இந்தப் பகுதிகளில் ஓட்டு வங்கி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்குமட்டுமே ஓட்டுப் போடக் கூடியவர்கள் மாஹே, ஏனாம் பகுதி வாக்காளர்கள்.
பா.ம.கவுக்காக தற்போது திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே வேலை பார்க்க முன் வந்துள்ளார்கள்.காங்கிரஸார் சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லை. பா.ம.கவினர், காங்கிரஸாரைத் தேடித் தேடிப் போய்ப்பார்த்தாலும், அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை.
தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது புதுவையில் தேர்தல் நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியேகாணப்படவில்லை. காங்கிரஸின் கோட்டையாக பல காலமாக திகழ்ந்து வரும் தங்களது பாண்டிச்சேரியில் பா.ம.க.போட்டியிடுவதே முதலில் புதுவைவாசிகளுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இப்போது காங்கிரஸ் ஆதரவு பா.ம.கவுக்கு இல்லை என்ற செய்தி நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போவதால்,தேர்தலில யார் ஜெயிக்கப் போகிறார் என்ற கேள்வி புதுவைவாசிகளின் மனதில் எழுந்துள்ளது. அதேசமயம்,இத்தனை காலமாக "கை"க்கு ஓட்டுப் போட்டு விட்டு இப்போது யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற குழப்பம்அவர்களிடையே நிலவுகிறது.
இந்த சைக்கிள் கேப்பில் உள்ளே புகுந்து கலகலக்க வைக்க பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது. அந்தக் கட்சியின்வேட்பாளராக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத லலிதா குமாரமங்கலம், பிரசாரத்தைத் திட்டமிட்டுநடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தும் அவர்,பிரசாரத்திற்கு வாஜ்பாய் அல்லது அத்வானியை அழைத்து வரவும் முயன்று வருகிறார்.
மொத்தத்தில், புதுவையில் நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது மே13ம் தேதி மட்டும்தான் உறுதியாகத் தெரியும்.