அரவாணிகளுக்கு வாக்களிக்க உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
அரவாணிகளுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ரஜினி என்ற பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரவாணிகளுக்கு குடும்ப அட்டை, தேர்தலில் வாக்களிப்பது போன்ற அடிப்படை உரிமைகள் இதுவரை இல்லை. வாக்களிக்கும் உரிமை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரவாணிகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சண்முகம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
ரஜினி சார்பில் வழக்கறிஞர் சுவாமிநாதன் ஆஜராகி வாதாடினார். அவரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக இன்னும் 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.