அத்வானியின் ரத யாத்திரை: மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகம் வருகை
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி மேற்கொள்ளவுள்ள ரத யாத்திரைக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து தமிழககாவல்துறை உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்று தமிழகம் வருகிறார்கள்.
வருகிற 10ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் அத்வானி ரத யாத்திரை நடத்தவுள்ளார். இதற்குபல்வறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தாலும் ரத யாத்திரை நிச்சயம் நடக்கும் என்று அத்வானியும்,பா.ஜ.கவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
குமரியில் உள்ள கேரள மாநில அரசின் விருந்தினர் விடுதி முன்பிருந்து ரத யாத்திரை கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் விருந்தினர் விடுதியிலிருந்து ரத யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது.இதனால் யாத்திரை புறப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் அத்வானிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆராய மத்திய பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் இன்றுதமிழகம் வருகின்றனர். சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர்கள்கன்னியாகுமரி செல்கின்றனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
இதற்கிடையே, கோவை வழியாக அத்வானியின் ரத யாத்திரை செல்வதற்கு கோவை நகர இஸ்லாமியர்கள் ஆட்சேபம்தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கோவை நகரம் மதக் கலவரங்களைக் கண்டு அந்தப் புண் இன்னும் ஆறாத நிலையில் உள்ளது.
இந்த சமயத்தில் தற்போது அமைதியாக உள்ள கோவை நகரில் மதக் கலவரங்கள் மீண்டும் ஏற்பட அத்வானியின் ரத யாத்திரைவழி வகுத்து விடும். எனவே கோவை வழியாக அத்வானி செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோவை மாவட்டஹீதாயதுல்லா இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்வானி கோவை வருவதையொட்டி அங்கு மிகக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ்தலைகளாகவே காணப்படுகிறது. நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் போலீஸ் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.