சென்னை தொழிலதிபரை பெங்களூருக்கு கடத்திய 3 பேர் கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை பெங்களூருக்குக் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் காசிம் அலி தெருவைச் சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப்(37). இவர் கடிகாரக் கடையும், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் மேன்பவர் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இவரை அக்பர் (23), அக்பர் பாஷா (28), ஜமீர் (38) ஆகியோர் பெங்களூருக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.
ஒரு ஹோட்டலில் வைத்து, அடித்து உதைத்துள்ளனர். ரூ.50,000 கொடுத்தால் விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து அஷ்ரப் தனது செல்போன் மூலம் மனைவி ஷெரீனா பானுவைத் தொடர்பு கொண்டு, தன்னை 3 பேர் கடத்தியுள்ளதாகவும், ரூ.50,000 பணத்தை தயார் செய்து விட்டு தனது செல்போனுக்குத் தகவல் கொடுக்குமாறும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் ஷெரீனா புகார் கொடுத்துள்ளார். போலீஸார் செல்போன் நம்பர் மூலம் அஷ்ரப் பெங்களூரில் இருப்பதைக் கண்டு பிடித்தனர். பின்னர் துணை ஆணையர் சண்முக ராஜேந்திரன், நான் அஷ்ரப்பின் உறவினர் பேசுகிறேன். ரூ.50,000 தயார் செய்துள்ளேன். இதை எங்கே கொண்டு வந்து கொடுப்பது என்று கேட்டுள்ளார்.
அதற்கு கடத்தல்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயரைக் கூறியுள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்து தனிப்படை போலீஸார் பெங்களூர் வந்து, சில்வர் ஜூப்ளி பார்க் போலீஸாரின் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அஷ்ரப்பை விடுவித்ததுடன், கொள்ளையர்களைக் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
விசாரணையில் கடத்தல்காரர்கள் மூவரும் ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும், அஷ்ரப்பின் மாமா அல்தாப்பிடம் வெளிநாடு போக பணம் கட்டி ஏமாந்தவர்கள் என்றும், அந்த பணத்தை அஷரப்பிடம் வசூலிக்கவே அவரைக் கடத்தியதாகவும் தெரிவித்தனர்.
புகார் தெரிவிக்கப்பட்ட ஒரே நாளில் போலீஸார் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.