விரல் வெட்டி ஏட்டையாவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை
சென்னை:
போலீஸ் விதிகளுக்கு மாறாக அதிமுக தீவிர உறுப்பினராக செயல்பட்டு, அந்தக் கட்சிக்காக விரலையும் வெட்டி காணிக்கையாக்கிய ஏட்டையா ரத்னத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்.ஜி.ஏ. சங்கத்தின் முன்னாள் தலைவர் சுப.சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலையத்தின் ஏட்டையா ரத்னம் அதிமுக மீதான பற்றை விரலை வெட்டி வெளிப்படுத்தியிருக்கிறார்.
அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிப்படி யாரும் எந்த அரசியல் கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விதி உள்ளது.
ஏட்டு ரத்னம் விரலை வெட்டி செய்தி கிடைத்தவுடன், சட்டப்படி, அவரை காவல்துறை எஸ்.பி. பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்கொலை முயற்சி வழக்கும் பதிவாகி இருக்க வேண்டும்.
ஆனால், அதை விட்டுவிட்டு போலீஸ் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா அந்த ஏட்டையாவுக்கு அப்பல்லோவில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். அமைச்சரை அனுப்பி குசலம் விசாரிக்கிறார். பழக்கூடை கொடுத்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார். ரத்னத்துக்காக துயரம் அடைந்துள்ளதாக அறிக்கை விடுகிறார்.
போலீஸ் அமைச்சரான ஜெயலலிதாவே விதியை மீறினால் எப்படி? இதே ஏட்டு ரத்னம் கருணாநிதிக்காகவோ அல்லது சோனியாவுக்காகவோ இது போல வெட்டியிருந்தால் ஜெயலலிதா விட்டு வைப்பாரா?
இதனால் விரல் வெட்டி ஏட்யாைவுக்காக கவலை அடைவதையெல்லாம் விட்டுவிட்டு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications