கரூர் அருகே ஒரே கிராமத்தில் 7000 வாக்காளர்கள் நீக்கம்!
கரூர்:
கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் காலம் காலமாக ஓட்டுப் போட்டு வந்த 7000வாக்காளர்களை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
கரூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் பள்ளப்பட்டி.முஸ்லீம்கள் அதிகம் வாழும் இக்கிராமத்தில் மொத்தம் 28,000 வாக்காளர்கள் உள்ளனர்.
சமீபத்தில் கரூர் தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் ஆய்வின்போது பள்ளபட்டியில் 7000 ஓட்டுக்களை நீக்கிவிட்டனர். நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பல காலமாக தேர்தல்களில் ஓட்டுப் போட்டுவந்தவர்கள். முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் நீக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
இது குறித்து பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவர் முனவர் பேகம் தலைமையில் கூடிய கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், உயர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது.