காதல் திருமண விவகாரம்- மதமாற்ற சட்டத்தின் வழக்கு: பாதிரியார், மகளுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாக இருந்த பாதிரியாருக்கும் அவரது மகளுக்கும் சென்னை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகம். இவரது மகன் ஞானவேல். இவர் ஜோஸ்வா தங்கமணி என்றகிறிஸ்தவப் பாதியாரின் மகள் ராஜேஸ்வரி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலையில் தனது மகன் ஞானவேலை பாதிரியார் கட்டாயப்படுத்தி ராஜேரிஸ்வரியுடன் திருமணம் நடத்திவைத்துவிட்டதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் திலகம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜேஸ்வரி மற்றும் பாதிரியார் ஜோஸ்வா தங்கமணி ஆகியோர் மீது மதமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காதல் திருமணம் தொடர்பான இந்த விஷயத்தை மதமாற்றத் தடை சட்டத்தின்கீழ் போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து பாதிரியாரையும் ராஜேஸ்வரியையும் கைது செய்ய முயன்றனர்.
இதைத் தொடர்ந்து பாதிரியார் ஜோஸ்வா தங்கமணியும், ராஜேஸ்வரியும் சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், இருவருக்கும் ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.