சென்னையில் சோனியா, கருணாநிதி, லாலு, பவார், வைகோ, ராமதாஸ் பங்கேற்கும் கூட்டம்
சென்னை:
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி பங்கு பெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த காங்கிரஸ்திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கட்சிகள் அனைத்தும் மும்முரமடைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. முதலில் டெல்லியில் இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியால் டெல்லி வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டதால் அந்தக் கூட்டத்தைசென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சோனியா காந்தி, கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அக் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி என்று காங்கிரஸ் கூட்டணிக்கு பெயர் சூட்டப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
கூட்டத்துக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, இருப்பினும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தக் கூட்டம்நடக்கலாம் என்று தெரிகிறது.
சோனியா, பிரியங்கா பிரச்சாரம்
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகள் பிரியங்காவும்கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நீலகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய சோனியாவுடன், பிரியங்கா வதேராவும் வருகிறார். இருவரும்கூட்டாக பிரச்சாரம் செய்வார்கள். அவர்கள் வரும் தேதி, பிரச்சார இடம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் இருவரும் பிரச்சாரம் செய்வார்கள் என்றார் பிரபு.