பா.ஜ.கவில் ஆள் பஞ்சம்: ராமதாஸ் தாக்கு
பாண்டிச்சேரி:
தமிழக பா.ஜ.கவில் வேட்பாளர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது, இதனால் தான் அடுத்த கட்சியில் ஆட்களைத் தேடிப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இன்று பாண்டிச்சேரி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி அமைத்த கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். இந்தக் கூட்டணிக்கு பெரும் வெற்றி காத்திருக்கிறது. சோனியாவில் தலைமையில் ஆட்சி அமைப்போம்.
சோனியாவை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புரியவே இல்லை. தமிழக மக்கள் ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதிமுக ஒரு இடத்திலும் ஜெயிக்காது. அவருடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.கவுக்கு ஒரு இடத்திலும் டெபாசிட் கூட மிஞ்சாது.
தர்மபுரியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பு.தா. இளங்கோவன் இன்னும் பா.ம.கவில் இருந்து விலகவில்லை. இன்னும் அவரிடம் இருந்து ராஜினாமா கடிதமே வரவில்லை. சீக்கிரம் அனுப்பி வைக்கட்டும்.
பா.ம.கவில் இருப்பவரையே தனது வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது. இதிலிருந்து பா.ஜ.கவில் போட்டியிடக் கூட வேட்பாளர்கள் இல்லாத அளவுக்கு ஆள் பஞ்சம் நிலவுவது தெளிவாகிறது. ஆளே இல்லாத இவர்கள் எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று கேட்டார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications