வாஜ்பாயை எதிர்த்து "தமிழக தேர்தல் மன்னன்" போட்டி!
சேலம்:
ஒரு தேர்தல் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு சாதனை படைத்து வரும் தேர்தல் மன்னன் பத்மராஜன் வரும்நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். தேர்தல்களில் போட்டியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதுவரைமொத்தம் 62 முறை தேர்தலில் போட்டியிட்டு சாதனை படைத்துள்ளார். ஒரு முறை கூட டெபாசிட் பெறவில்லைஎன்பது வேறு விஷயம்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கே.ஆர்.நாராயணன் போட்டியிட்டபோதும், பின்னர் அப்துல் கலாம்போட்டியிட்டபோதும் அவரை எதிர்த்து போட்டியிட மனு செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த இரண்டு தேர்தல்களில் மட்டுமே அவரால் போட்டியிட இயலாமல் போனது.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து அவரது லக்னோ தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பத்மராஜன் முடிவு செய்துள்ளார். கின்னஸ் சாதனை படைப்பதுதான் தனது நோக்கம் என்றும் அவர்கூறுகிறார்.