பா.ஜ.கவுக்காக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்
சென்னை:
பா.ஜ.கவுக்காக ரஜினி ரசிகர்கள் தேர்தல் களத்தில் இறங்கி வருகின்றனர். குறிப்பாக பா.ம.க. போட்டியிடும்இடங்களிலும், வட சென்னையிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரத்தில்இறங்கியுள்ளனர்.
வட சென்னையில் பா.ஜ.க. சார்பில் வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் போட்டியிடுகிறார்.தன்னைப் போலவே ஆன்மீகவாதியான நம்பியார் மீது அதீத மரியாதை வைத்திருப்பர் ரஜினி என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வட சென்னைப் பகுதியில் பா.ஜ.க. நடத்தும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ரஜினி ரசிகர்மன்றத்தினர் பெரும் எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளனர். இதை பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தமிழிசைநிருபர்களிடம் தெரிவித்தார்.
பா.ஜ.கவுக்காக பிரச்சாரமும் செய்யப் போவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
வட சென்னையில் திமுகவின் சார்பில் செ.குப்புசாமி போட்டியிடும் நிலையில் பா.ஜ.கவுக்காக ரஜினி ரசிகர்கள்களமிறங்கியிருப்பதை உடன் பிறப்புக்களும் தங்களது தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுவரை பா.ம.க.-பா.ஜ.க. மோதும் 3 தொகுதிகளில் மட்டுமே ரஜினி ரசிகர்களை பா.ஜ.கவுக்கு ஆதரவாககளமிறங்கச் சொல்லி உத்தரவிட்டார் மன்றத்தின் தலைவர் சத்யநாராயணா. மேலும் பா.ம.க. போட்டியிடும் மற்றஇடங்களிலும் அக் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சத்யநாராயணா மூலமாக, மறைமுகமாக இந்த உத்தரவுகளைப் போட்டுவிட்டு ரஜினி வழக்கம்போல்பெங்களூருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். இந் நிலையில் வட சென்னையிலும் திமுகவுக்கு எதிராக அவரது ரசிகர்கள்களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்பியார் தரப்பில் இருந்து ரஜினியிடம் பேசப்பட்டதன் விளைவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளதாக திமுகவினர்சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதைச் சமாளிக்கும் விதமாக வீடு, வீடாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது திமுக.