முகமது அலி குறித்து செய்தி வெளியிட நக்கீரனுக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
தமிழக சிபிசிஐடி டி.ஐ.ஜி. முகம்மது அலி குறித்து வருகிற 31ம் தேதி வரை நக்கீரன் இதழில் எந்தக் கட்டுரையும் வெளிவரக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் சிபிசிஐடி டி.ஐ.ஜி. முகம்மது அலியின் தொடர்புகள் குறித்து நக்கீரன் இதழில் கட்டுரைகள்வெளியாகியிருந்தன.
இதையடுத்து நக்கீரனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அலி மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கட்டுரைகள் முற்றிலும்உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டவையாக உள்ளன. இதனால் தனக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு தர நக்கீரனுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் என்னைப் பற்றி இனி கட்டுரை வெளியிடவும் நக்கீரனுக்குதடை விதிக்க வேண்டும் என்று அதில் முகம்மது அலி கோரியிருந்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான நக்கீரன் தரப்பு வழக்கறிஞர், இனி முகம்மது அலி குறித்து தொடர்ந்து கட்டுரைகள்வெளியிடப்படாது என்று உறுதியளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், வருகிற 31ம் தேதி வரை முகம்மது அலி குறித்து எந்த செய்தியோ,கட்டுரையோ, ஆய்வுக் கட்டுரையோ வெளியிடக் கூடாது என்று நக்கீரன் இதழுக்கு இடைக்காலத் தடை விதித்தார். வழக்கைஏப்ரல் 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.