புதுவையில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் ரெடி!!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து அங்கு சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக காரைக்கால்பகுதி காங்கிரஸ் தலைவர் திருமுருகன் அறிவித்துள்ளார்.
புதுவை தொகுதியில் பல காலமாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.இதனால் காங்கிரஸ் தரப்பு கடும் அதிருப்தியுடன் உள்ளது. ஆனால் கட்சி மேலிடம், போட்டியிடப் போவதில்லை என்றுதிட்டவட்டமாகக் கூறி விட்டதால் எதிர்ப்பைக் காட்ட முடியாமல் உள்ளுக்குள் குறிக் கொண்டுள்ளனர் காங்கிரஸார்.
இந் நிலையில் காங்கிரஸ் மேலிட அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பாமக தரப்பு படு வேகமாக தேர்தல் வேலைகளைஆரம்பித்துள்ளது. ஆனால், அவர்களுடன் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
பா.ம.க வெற்றிக்காக உழைப்பேன் என்று அறிக்கை விட்ட கண்ணனும் அமைதியாகிவிட்டார். இதனால் பாமக தரப்பு கவலையில்ஆழ்ந்துள்ளது.
இந் நிலையில் பாமகவின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக காரைக்கால் பகுதி காங்கிரஸ் தலைவரான திருமுருகன்பாண்டிச்சேரியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
தொழிலதிபரான திருமுருகன் பெரும் பணக்காரரும் கூட. காரைக்கால் பகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கும் உள்ளது.காங்கிரஸார் மட்டுமல்லாது பொது மக்களிடமும் நன்கு அறிமுகமானவர்.
திருமுருகனின் தந்தை நளமகராஜன் காரைக்கால் பகுதியில் உள்ள கோட்டுச் சேரி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து 4 முறைவென்றவர். இப்போதும் அவர் ஒரு எம்.எல்.ஏ.
காரைக்கால் பகுதியில் உள்ள 4 சட்டசபைத் தொகுதிகளில் மொத்தம் 1.2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்பெரும்பாலானோர் காங்கிரஸ் வாக்காளர்கள்தான். இந்த காங்கிரசார் நளமகராஜன், திருமுருகனின் தீவிர ஆதரவாளர்கள்.
எனவே இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டால் இப் பகுதியில் உள்ள ஓட்டுக்களில் பெரும்பாலானவற்றை திருமுருகன் தட்டிச்சென்று விடுவார் என்பது உறுதி.
இதனால் திருமுருகனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமகவினர் தற்போது மும்ரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் கலாட்டா, பு.தா. இளங்கோவன் கட்சித் தாவி பா.ஜ.க. வேட்பாளரானது, பாண்டிச்சேரி காங்கிரசார் தலைவலி எனபா.ம.க. பலவிதத்திலும் பிரச்சனையில் உள்ளது. அக் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு உள்ள இரண்டே ஆறுதலான விஷயங்கள்,பா.ம.கவுக்கே உரிய ஓட்டு வங்கியும், திமுக-மதிமுகவும் தான்.