அரசு கார் வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் காளிமுத்து கோரிக்கை
திருச்சி:
அரசு வாகனத்தைப் பயன்படுத்தவும், விருந்தினர் மாளிகைகளில் தங்கவும் சபாநாயகர்களுக்கு விதிக்கப்பட்டதடையை நீக்க வேண்டும் என்று சபாநாயகர் காளிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலையொட்டி, அரசு வாகனங்கள் பயன்படுத்தவும், அரசு விருந்தினர் விடுதிகளில் தங்கவும் அமைச்சர்களுக்குவிதிக்கப்பட்ட தடை சபாநாயகர்களுக்கும் பொருந்தும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் புதுக்கோட்டையில் ஒரு திருமண மண்டப திறப்புவிழாவிற்காக திருச்சி வந்த காளிமுத்து இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். டெல்லி சென்று அந்த உத்தரவைபடித்து பதில் தெரிவிக்கிறேன் என்று கூறினார். நான் அனைத்து மாநில சபாநாயகர்கள் சார்பாக இந்த விளக்கத்தைகேட்டுள்ளேன்.
எதிர்க்கட்சியினருக்கு சட்டசபையில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.சட்டசபை கூட்டத்தொடரில் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கே அதிக நேரம் பேச அனுமதி தரப்படுகிறது.எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையை விட அதிக நேரம் பேச அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின், வரும்ஜூன் முதல் வாரத்தில் சட்டசபை கூடும் என்று காளிமுத்து கூறினார்.