திமுக கூட்டணிக்கு 34: அதிமுக-பாஜகவுக்கு 5 இடங்களே
டெல்லி:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 இடங்களில் வெற்றிகிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு நிபுணரும் என்.டி.டிவியின் அதிபருமான பிரணாய் ராய், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஏ.சி.நீல்சன் குழுமம் ஆகியோர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இத் தேர்தலில் அதிமுகவுக்கு மிகப் பெரும் தோல்வி கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப் பிரபலமான தேர்தல் கருத்துக் கணிப்பியல் நிபுணரான (Psephologist ) பிரணாய் ராயும், மும்பை இந்தியன்எக்ஸ்பிரஸ் நிறுவனமும், உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏசி.நீல்சன் குழுமமும் இணைந்து இந்தக் கருத்துக்கணிப்பை கடந்த வாரத்தில் நடத்தின.
இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பிரதமர் வாஜ்பாய்க்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாகாந்திக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது. மேலும், வாஜ்பாயின் வாரிசாக அத்வானியையும், சோனியாவின் அரசியல்வாரிசாக பிரியங்காவும் மக்கள் மனதில் உள்ளனர் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கருத்துக் கணிப்பின் முக்கிய அம்சம் தமிழக தேர்தல் குறித்துத்தான். திமுக தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்தக் கூட்டணிக்கு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 34 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணிக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும் என்ற அதிர்ச்சியான செய்தியையும் இந்தக் கருத்துக் கணிப்புதெரிவிக்கிறது.