கருணாநிதியின் கோபம் புரியவில்லை: இல.கணேசன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைவர் கருணாநிதியின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:
தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி தராததால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கருணாநிதி விலகியதாகஜெயலலிதா குற்றம் சாட்டியதற்காக கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தயாநிதிக்கு அமைச்சர் பதவி கேட்டார்களாஎன்பது தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் கருணாநிதியின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையைவெளியிட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதி மீது பலவகையில் குற்றம் சாட்டினார். அப்போது அவர்களுக்கு எதிராகவக்கீல் நோட்டீஸ் அனுப்பாத கருணாநிதி இப்போது மட்டும் அனுப்புவது ஏன்?
கருணாநிதியின் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
பிரதமர் வாஜ்பாயைக் குறை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கருணாநிதிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தெரியும். அதனால்தான் வாஜ்பாய்க்கும், துணைப் பிரதமர் அத்வானிக்கும் இடையே பிளவுஏற்படுத்த முயல்கிறார்கள்.
காவேரி நீர் தொடர்பாக ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கிறார் பாமக தலைவர் ராமதாஸ். இப்போது வைத்துள்ள கூட்டணிமூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காவிரி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட சொல்ல வேண்டியது தானேஎன்று கூறினார்.