ஆம்லேட் தகராறில் அரசு மதுக்கடையை சூறையாடிய ரெளடிகள்
சென்னை:
ஆம்லேட் கொண்டு வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த ரெளடிக் கும்பல் அரசு மதுக்கடை பாரை அடித்துநொறுக்கி சூறையாடியது. இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு 5 பேர்வந்தனர். அவர்கள் அப்பகுதியின் ரெளடிகள். கடைக்கு வந்த அவர்கள் மது கேட்டனர். பின்னர் ஆம்லேட் ஆர்டர்போட்டனர்.
பக்கத்து கடையில் இருந்து ஆம்லேட் வரத் தாமதமானதால் அக் கும்பல் போதையில் சூடாகிப் போனது. மதுக்கடை ஊழியர்களையும் பார் ஊழியர்களையும் அக் கும்பல் சகட்டுமேனிக்கு தாக்கினர்.
பின்னர் பார் மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கையில் கிடைத்த மதுபாட்டில்களையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் செய்யப்பட்டது. உடனடியாக தேடுதலில் இறங்கிய போலீஸார் தாக்குதலில்ஈடுபட்ட ரெளடிகளான செந்தில்நாதன், வெங்கட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனர். அவர்களைத் தேடி வருகின்றனர். ரெளடிகள் தாக்குதலில் பாரில்அமர்ந்திருந்த "குடிமக்கள்" 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.