நெல்லையை தவிர 7 தொகுதி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லி:
சர்ச்சையை ஏற்படுத்தி வந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஒருவழியாக வெளியாகியுள்ளது. இருப்பினும் திருநெல்வேலிதொகுதியில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் அந்தத் தொகுதியின் வேட்பாளரைத் தவிர மற்ற 7 தொகுதிகளுக்குரியவேட்பாளர்களை மட்டும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்குள்கட்சி மேலிடத்திற்குப் போதும் போதுமென்றாகி விட்டது.
மாநிலத் தலைவர் வாசனின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எழுந்த புகாரையடுத்து புதியதேர்வுக் குழு போடப்பட்டு அந்தக் குழுவினருடன் வாசன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.அதன் இறுதியில் 7 வேட்பாளர்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டனர். திருநெல்வேலி தொகுதியில் தொடர்ந்துஇழுபறி நிலவியதால் அத்தொகுதிக்குரிய வேட்பாளரை பின்னர் முடிவு செய்யலாம் என்று கட்சி மேலிடம் முடிவுசெய்தது.
இதையடுத்து காங்கிஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் டெல்லியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் 7வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அறிவித்தார். அதன்படி சிவகங்கை-ப.சிதம்பரம், கோபிச் செட்டிப்பாளையம்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சேலம்-தங்கபாலு, திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன், பெரியகுளம் -ஜே.எம்.ஆரூண், ராசிபுரம் - கே.ராணி, பழனி - கார்வேந்தன் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே மயிலாடுதுறை (மணிசங்கர் அய்யர்), நீலகிரி (பிரபு) தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். நெல்லை மட்டும் தற்போது பாக்கி உள்ளது.
வாசன் திருப்தி:
வேட்பாளர் பட்டியல் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வாசன் கூறியதாவது:
வேட்பாளர் பட்டியல் எனக்கு முழு திருப்தி அளிக்கிறது. வரும் 7ம் தேதி காங்கிரஸ் பிரசார தொடக்க விழா மத்தியசென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வேட்பாளர் அனைவரும் அறிமுகப்படுத்தப்படுவார்கள். 9அல்லது 10ம் தேதி முதல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications