திருவாரூர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் வெட்டி கொலை
திருவாரூர்:
திருவாரூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
வி.சிறுத்தைகள் அமைப்பாளராக இருந்த முகிலனின் (28) வீடு தஞ்சாவூர் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இன்று காலை அவர் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்கு வெளியே அவரை 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாள்களால் வெட்டியது.
இதில் மிக பலத்த காயமடைந்த முகிலன் சரிந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த வாலிபரின் கொலையால் அப் பகுதியில் ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் திருவாரூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் தான் முகிலனுக்குத் திருமணமானது. இவரது மனைவி மணிமேகலை கர்ப்பிணியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications