யாருக்கும் ஆதரவில்லை.. ஆனால், பா.ஜ.கவுக்கு ஓட்டு- ரஜினி
சென்னை:
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய ரஜினி, தொடர்ந்து பேசுகையில் நான் பாரதீயஜனதாவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன். தமிழக மக்களும், ரசிகர்களும் என்னைப் போலவே சிந்தித்துப் பார்த்துஓட்டுப் போட வேண்டும் என்றார்.
இதன்மூலம் பா.ஜ.கவுக்கே ஆதரவு என்பதை தனக்கே உரிய குழப்ப பாணியில் வெளிப்படுத்தினார் ரஜினி.
நடிகர் ரஜினிகாந்த்தின் "மனம் திறப்பு" இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது கல்யாணமண்டபமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்தது. ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் மண்டபத்திற்கு வெளியேகுழுமியிருக்க அவர்களை விட அதிக ஆவலுடன் மண்டபத்திற்குள் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள்,வீடியோகிராபர்கள் கூடியிருந்தனர்.
காலை 10.45 மணிக்கு வெள்ளை நிற குர்ஜா, ஜிப்பாவில், முகத்தில் தாடியுடன், சீரியஸ் முகத்துடன்பத்திரிக்கையாளர்கள் முன் வந்து அமர்ந்தார் ரஜினிகாந்த். பின்னர் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை அவர்வாசித்தார்.
அதில் பா.ஜ.க. குறித்து அவர் பேசிய விவரம்:
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும், அது நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டசபைத் தேர்தலாகட்டும்,எனது ஆதரவு யாருக்கு? அதாவது எனது வாய்ஸ் யாருக்கு என்ற பேச்சு எழுகிறது.
நான் தெளிவாகக் கூறுகிறேன், பல காரணங்களுக்காக இந்தத் தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழக மக்களே, இப்போது நமது மாநிலத்தின்தலையாய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. ஏழை முதல் பணக்காரர் வரை, மிருகங்கள், பறவைகள் கூட தண்ணீர்இல்லாமல் தத்தளித்து வருகிறோம்.
இதற்கு நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் தீர்வு காண முடியும். நதிகளைஇணைக்காவிட்டால், அதிகம் பாதிக்கப்படப் போவது நமது தமிழகம்தான். காரணம், பக்கத்தில் உள்ள ஆந்திரா,கேரளா, கர்நாடகாவில் பல ஜீவ நிதிகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஜீவ நதி என்று எதுவுமே இல்லை.
நதிகளை இணைக்க முயற்சி எடுத்தால் அந்தத் திட்டத்திற்கு ரூ. 1 கோடி தருவதாக நான் ஏற்கனவே வாக்குறுதிஅளித்துள்ளேன். மத்தியில் ஆட்சி அமைப்பவர்களால்தான் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
கடந்த ஒரு மாதத்தில் நான் பல மாநிலங்களைச் சுற்றி வந்தேன். அப்போது ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது,தமிழகத்தில் எந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது.
ஆனால் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமையப் போவது நிச்சயம். இது உறுதி.
சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூட, நதிகளைஇணைப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். திரு அத்வானி அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டுநதிகளை இணைப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.
நதிகளை இணைக்கும் ஆட்சிக்கே, கட்சிக்கே எனது ஓட்டு. அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கே எனது ஓட்டு. நான் ஓட்டுப் போடப் போவது பாஜகவுக்குத் தான். அதற்காக எனது ரசிகர்களும்அவ்வாறே வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன்.
ரசிகர்களின் ஓட்டுரிமையை பறிக்க நான் விரும்பவில்லை. நான் ஓட்டுப் போடும் கட்சிக்குத்தான் நீங்களும்ஓட்டுப் போட வேண்டும் என்று ரசிகர்களை கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் சிந்தியுங்கள்.
தமிழகம் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குறிப்பாக தாய்மார்கள், இளைஞர்களைக் கேட்கிறேன்.உங்க கட்சி ஆளுன்னு பார்த்து ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல்லது உங்க ஜாதி ஆளுன்னு பார்த்து ஓட்டுப்போடப் போகிறீர்களா?
அல்லது தண்ணீர்ப் பிரச்சினையை நினைத்து ஓட்டுப் போடப் போகிறீர்களா? இது உங்கள் வாழ்க்கைப் பிரச்சினை.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இதனால்சிந்தியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள்.
வாழ்க தமிழக மக்கள், வளர்க தமிழகம்.
நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!!
ஜெய்ஹிந்த்
கொசுறு: அறிக்கையை மட்டும் வாசித்த ரஜினி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.