தேர்தல் அதிகாரிகளை கலங்கடிக்கும் சில்ற வேட்பாளர்
காஞ்சிபுரம்:
ஒவ்வொரு தேர்தலின்போதும் டெபாசிட் பணத்தை சில்லறை காசுகளாகக் கட்டி, தேர்தல் அதிகாரிகளைக் கதிகலங்க வைத்து வருகிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியான சித்தரஞ்சன்.
காஞ்சிபுரம் குரு கோவில் எதிரே தேங்காய் கடை வைத்திருப்பவர் சித்தரஞ்சன். கடந்த 1988ம் ஆண்டு முதல்தேர்தல் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தும் நபராக இருந்து வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர், வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது டொபாஸிட் பணம் முழுவதையும் சில்லறைக் காசுகளாக மூட்டையில் கட்டி எடுத்து வருவார். இதனால்சில்ற சித்தரஞ்சன் என்ற அடைமொழியுடன் இந்த ஏரியாவில் பிரபலமாகியுள்ளார்.
1991 தேர்தலின்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத்தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். சட்டசபைத் தேர்தலுக்கான டெபாஸிட் பணம் ரூ.250யையும்,மக்களவைத் தேர்தலுக்கான டெபாஸிட் பணம் ரூ.500யையும் சில்லறையாகவே கட்டினார்.
1996ம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட ரூ. 5,000த்தையும் செங்கல்பட்டு நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட ரூ.10,000த்தையும் டெபாஸிட் பணம் முழுவதையும் மூட்டைகளில் சில்லறைக்காசுகளாகவே கொண்டு வந்து கட்டினார்.
அந்த எல்லாத் தேர்தல்களிலும் தோல்வியடைந்து எல்லா சில்லறையையும் (டெபாஸிட்) இழந்தார்.
பின்னர் நடந்த 1999ம் ஆண்டு தேர்தலின்போதும் தனது சில்லறைக் காசுகளால் தேர்தல் அதிகாரிகளுக்கு மீண்டும்தலைவலி கொடுத்தார். அவர் கொடுத்த காசுகளை எண்ண ஆரம்பித்த தேர்தல் அதிகாரிகள் நீண்ட நேரஎண்ணிக்கை முடிவில் ரூ.10,000க்கும் குறைவாக சில்லறைகள் இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாகசித்தரரஞ்சனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு தேர்தல் வட்டாரத்தில் புகழ் பெற்ற சித்தரஞ்சன் இன்று வேட்பு மனுவை வாங்க வந்தார். அப்போதுகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவர் அனுப்பிய பேக்ஸ் ஒன்றின் நகல்களை அங்கிருந்தவர்களுக்குவழங்கினார்.
அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதாலும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாலும் தன்னைப் போன்ற ஏழைவேட்பாளர்கள் பாதிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். வரும் 22ம் தேதி ரூ. 10,000க்கான சில்லறைக்காசுகளுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.