ரஜினி ஆதரவு: திண்டுக்கல் சீனிக்கு ஜெ. கொடுத்த டோஸ்
சென்னை:
ரஜினி ரசிகர்களின் ஆதரவை ஏற்கத் தயார் என்று பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் கடும் டோஸ் கிடைத்தது.
சீனிவாசனுக்கு கொஞ்ச நாளாகவே நேரம் சரியில்லை. சசிகலாவின் முழு ஆதரவு இருந்தும் கூட இந்த முறை திண்டுக்கல் தொகுதியை ஜெயலலிதா அவருக்குத் தரவில்லை.
பா.ம.கவை எதிர்த்து வந்தவாசியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இன்சார்ஜ் ஆகப் போட்டு, திருவண்ணாமலைக்கு பேக் செய்யப்பட்டார்.
இந் நிலையில் வந்தவாசி அருகே அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய சீனி, ரஜினி ரசிகர்களுடன் அதிமுக தொண்டர்கள் கைகோர்ப்பதில் தவறில்லை. ரஜினியின் ஆதரவை அதிமுக ஏற்கிறது என்றார்.
சசிகலாவுக்கு சீனிவாசன் மிகவும் நெருக்கமானவர் என்பதால், ரஜினியின் ஆதரவை அதிமுக ஏற்றுக் கொண்டதாக செய்தி பரவியது.
மதுரை பிரச்சாரத்தில் இருந்த ஜெயலலிதா இந்த பத்திரிக்கை செய்திகளைப் பார்த்துவிட்டு சீனிவாசனை செல்போனில் பிடித்து வாங்கு, வாங்கு என்று வாங்கியிருக்கிறார்.
கடும் டோசினால் பதறிப் போன திண்டுக்கல் சீனிவாசன், அம்மா.. நான் அப்படி சொல்லலேம்மா.. பத்திரிக்கைக்காரங்கள் அப்படி போட்டுட்டாங்க என்று பம்மியிருக்கிறார். ஆனால் உளவுத்துறையின் ரிப்போர்டை கையில் வைத்துக் கொண்டு தான் பேசுவதை ஜெயலலிதா சுட்டிக் காட்ட, அம்மா மன்னிச்சுக்கோங்கம்மா என்று சரண்டர் ஆனாராம்.
இதையடுத்து அதிமுக ஆதரவு பத்திரிக்கைகளில் சீனிவாசனின் விளக்கம் வெளியாகியுள்ளது. அதில், வந்தவாசியில் நடந்த அதிமுக கூட்டத்துக்கு ரஜினி மற்றும் விஜய்காந்த் ரசிர்கர்கள் தாங்களாகவே வந்து கலந்து கொண்டனர். அவர்களாகவே வருவதால் எப்படி ஒதுக்க முடியும் என்று தான் நான் கூறினேன். ஆனால், யாரது ஆதரவை பெறுவது, ஒதுக்குவது என்பதை அம்மா தான் முடிவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
ரஜினி தானே முன் வந்து தந்த ஆதரவை அதிமுக இதுவரை ஏற்கவில்லை. இந் நிலையில் நாங்கள் கூப்பிடாமல் அவர்களாகவே வந்தார்கள என்று ரசிகர்களை அசிங்கப்படுத்தும் விதத்தில் சீனிவாசன் மூலமாக அதிமுக விளக்கம் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications