வைகோ மீதான பொடா விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்றுஇடைக்காலத் தடை விதித்துள்ளது.
அவர் மீதான வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு வாபஸ் பெறச் சொல்லி தமிழக அரசுக்குபரிந்துரைத்துள்ளது. ஆனால் அதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.
இதை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறுஆய்வுக் குழுவின் பரிந்துரை மாநில அரசைக் கட்டுப்படுத்தும் என தீர்ப்பளித்தனர். அதே நேரத்தில்வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசு வழக்கறிஞர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றனர்.
ஆனால், பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தநீதிமன்றம், ஜூன் 30ம் தேதிக்குள் வழக்கை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையை எதிர்த்தும், வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சபர்வால், நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் ஆஜரானார். அவர் கூறுகையில், வைகோமீதான பொடா வழக்கில் முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கைவாபஸ் பெறுமாறு பொடா மறு ஆய்வுக் குழுவும் பரிந்துரைத்துள்ளது.
இந் நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற மாட்டோம்என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும்வழக்கை விசாரிக்கவும் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு தடை விதித்தனர்.
தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள்,. வைகோவின் மனு மீதுமேற்கொண்டு கோடை கால விடுமுறைக்குப் பின் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.