ரஜினி ரசிகர்கள் பாமக-திமுகவினர் மோதல்
விழுப்புரம் & மதுரை:
விழுப்புரத்திலும் மதுரையிலும் ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.க, திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் கப்பியாம்புலியூர் பகுதியில் வாக்குப் பதிவு நடந்தபோது அங்கு வந்த ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். பா.ம.கவினர் தாக்கியதில் ரவி என்ற ரஜினி ரசிகர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பா.ம.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரஜினி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
திமுக-ரஜினி ரசிகர்கள் மோதல்:
மதுரையில் திருப்பரங்குன்றம் அருகே ரஜினி ரசிகர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரஜினி ரசிகர்களை திமுகவினர் தாக்க முயன்றபோது போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.
ஏ.கே. மூர்த்தியின் கார் மீது கல்வீச்சு:
இதற்கிடையே செங்கல்பட்டு தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சென்ற கார் மீது அதிமுகவினர் கல் வீசி தாக்கினர்.
போலீசார் விரைந்து வந்து கும்பலை விரட்டியடித்தனர். இதில் மூர்த்தி காயமின்றி தப்பினார். கார் லேசான சேதம் அடைந்தது.