தலித்கள் மீது பயங்கர தாக்குதல், வீடுகளுக்குத் தீவைப்பு
கோவை:
கோவை அருகே காளப்பட்டி என்ற கிராமத்தில், கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 12க்கும்மேற்பட்ட தலித்கள் காயமடைந்தனர். தலித்களின் வீடுகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
காளப்பட்டி கிராமத்தில் தலித் சமுதாயத்தினர் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெரும்பான்மைசமூகத்தினராக கவுண்டர் இருந்து வருகின்றனர்.
தலித் சமுதாயத்தினர் தங்களது பகுதியில் நுழையக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கவுண்டர்கள்விதித்துள்ளனர். இதனால் இரு தரப்பினுருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
தலித் காலனியை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது ஈவ் டீசிங் வழக்கு கவுண்டர் தரப்பால் போடப்பட்டது. இதனால்அவர்களுக்கு இடையேயான மோதல் வலுத்தது. இந் நிலையில் ஒரு விழாவுக்கு போஸ்டர் ஒட்டுவது தொடர்பாகஅவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் தலித்கள் வசிக்கும் காலனிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கவுண்டர்கள்பயங்கர ஆயுதங்களோடு நுழைந்தனர். தலித்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். குறிப்பிட்ட சில வீடுகளைக் குறிவைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்தவர்களைத் தாறுமாறாகத் தாக்கினர்.
பெண்கள், குழந்தைகள் கூட அவர்களது இலக்கிலிருந்து தப்பவில்லை. 35 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.மேலும் 85 வீடுகள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த டி.வி. போன்ற பொருட்களை அடித்து நொறுங்கினர்.தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த ஆடு, மாடுகளும் வெட்டி சாய்க்கப்பட்டன.
இதை தடுக்க முயன்ற பழனிச்சாமி (62), முத்தான் (60), முருகேசன்(24), பாபு (25), அன்பழகன் (18), சுரேஷ் (20),ரமேஷ் (20), சேகர் (22), ஆனந்தன் (35), ரமேஷ்(21), ராஜேந்திரன் (21), செல்வராஜ் ஆகிய 12 பேருக்குஅரிவாள் வெட்டு விழுந்தது.
தகவல் அறிந்ததும் தாசில்தார், வருவாய் கோட்ட அதிகாரி, காவல்துறையினர் விரைந்து வந்தனர்.காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இன்று காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் கலவரம் நடந்த பகுதிகளைபார்வையிடுவதற்காக சென்றார். அப்போது தலித் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைஆட்சியர் முருகானந்தம் சமரசம் செய்தார்.
இதற்கிடையே கவுண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர். தங்கள் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும்முருகானந்தம் சமாதானப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தலித்களை கவுண்டர் சமுதாயத்தினர் கொடுமைப்படுத்தி வருவதுஅதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விஷயத்தில் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருந்துவருவதாகவும் தெரிகிறது.
நேற்று காலை கூட கோவிலப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்ற தலித்கள், தங்களைத் தாக்க கவுண்டர்கள்முயல்வதாகவும், பாதுகாப்பு அளிக்குமாறும் கோரியுள்ளனர். ஆனால் போலீஸர் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளனர். இந் நிலையில்தான் இரவு கடுமையான தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் கால்களில் விழுந்த தலித் பெண்கள், எங்களதுஉயிருக்குப் பாதுகாப்பில்லை என கதறி அழுதது, அனைவரையும் உலுக்கிவிட்டது.