கலாமுடன் உமா சந்திப்பு: சோனியா பிரதமராக எதிர்ப்பு
டெல்லி:
மத்தியப் பிரதேச முதல்வரும் பா.ஜ.க. முக்கியத் தலைவர்களில் ஒருவருமான உமா பாரதி இன்றுஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து, சோனியா காந்தி பிரதமராக வர அனுமதிக்கக் கூடாது என்றுகோரிக்கை விடுத்தார்.
கலாமை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, அன்னியரை பிரதமராக்க மாபெரும்சதி நடக்கிறது. இது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மாபெரும் கேடு. சோனியாபிரதமராகப் பதவியேற்ற பின் அதை எதிர்த்து எனது போராட்டம் தொடங்கும்.
அதே நேரத்தில் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றார்.
சோனியா பிரதமராவதைத் தடுக்க, பா.ஜ.க. மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் தனது மாநிலங்களவைஎம்.பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அதிகபட்ச எம்.பிக்களின் ஆதரவு கொண்ட சோனியாவை பிரதமராக விடாமல்தடுக்க முயல்வதன் மூலம் ஜனநாயக நெறிமுறைகளையே குழி தோண்டிப் புதைக்க பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி ஆகியவை முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் பேசுகையில், சோனியாவை எதிர்க்கும் சுஷ்மா, கோவிந்தாச்சார்யா, இரண்டு பெண்முதல்வர்கள் மூலம் தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை கேவலப்படுத்தும் முயற்சியில் ஒருபிரிவு பா.ஜ.கவினர் இறங்கியுள்ளனர்.
சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று குறி வைத்து தாக்கியே பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவைமக்கள் எப்படி புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
கலாமை சந்திக்கிறார் காங். தலைவர்:
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை காங்கிரஸ் தலைவரான பிரனாப் முகர்ஜி அல்லது சோனியா காந்தியின் அரசியல்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரில் ஒருவர் இன்று சந்தித்து, தங்களுக்கு ஆதரவாக உள்ள 317 எம்.பிக்களின் பட்டியலைஒப்படைத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஆணையர்கள் டாண்டன், கோபால்சாமி ஆகியோர் அப்துல்கலாமை சந்தித்து, 539 தொகுதிகளில் தேர்வான எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.