போலீஸாருக்கு தண்ணி காட்டிய விசாரணைக் கைதி !
பெரம்பலூர்:
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய விசாரணைக் கைதி உயரமான கட்டடம் ஒன்றின்மீது ஏறிக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி போலீஸாருக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் நன்மங்கலம் கிராமத்தில் கற்பழிப்பு முயற்சி புகார் தொடர்பாக வரதராஜன் என்பவரைபோலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காக பெரம்பலூருக்கு போலீஸார் அழைத்துவந்தனர்.
அப்போது பஸ் நிலையத்தில் போலீஸார் நின்றிருந்தபோது, வரதராஜன் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்.போலீஸார் அவரை துரத்திச் சென்றனர். வேகமாக ஓடிய வரதராஜன் அங்கிருந்த ஒரு உயரமான கட்டடத்தின் மீதுஏறினார்.
தன்னை போலீஸார் பிடிக்க முயன்றால் கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இதைப்பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. போலீஸார் வரதராஜனிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். நீண்ட நேரபேச்சுவார்த்தைக்குப் பின்னர் வரதராஜன் சமாதானம் அடைந்து கீழே இறங்கி வந்தார்.
அதன் பின்னர் அவரைக் கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸாருக்கும், கைதிக்கும் இடையேநடந்த இந்த கலாட்டாவால் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.