காலரா பாதிப்பு: சென்னை மாநகராட்சி மீது ஸ்டாலின் சரமாரி புகார்
சென்னை:
சென்னையில் சுத்தமான குடிநீர் வழங்காததாலும், குப்பைக் கூளங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சரியானநடவடிக்கை எடுக்காததாலுமே காலரா பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் ஓட்டேரி, பட்டாளம், புளியந்தோப்பு ஆகிய வட பகுதிகளில் காலரா பரவி வருகிறது. இதுவரைகாலராவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை ஸ்டாலின் இன்று காலை சந்தித்து உடல் நலம்விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நோயாளிகள் அனைவரும் கூறும் ஒரே புகார்,தூய்மையான குடிநீர் தங்களுக்கு வழங்கப்படாத காரணத்தால்தான் காலரா ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.
காலரா பாதிப்பு ஏற்பட்டும் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், சாக்கடைகளை அகற்றமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த அளவுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் படுமோசமான நிலையில் உள்ளது. மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை.
சென்னை நகர் முழுவதும் சுத்தமான குடிநீரை வழங்கவும், காலரா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சரியானநிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.