வேலை நிறுத்தத்தின்போது இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு உதவி: ஜெ. உத்தரவு
சென்னை:
வேலை நிறுத்தம் செய்தபோது பலியான தமிழக அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணிக் காலபலன்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை ஒரு மாதத்தில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் , அனைத்துத் துறைகளின்செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தாற்காலிக பணி நீக்கம் மற்றும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து பிறப்பித்த ஆணைகளை ரத்துசெய்து அந்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பிறப்பிக்கலாம்.
வேலை நிறுத்தத்தின்போது இறந்து போன பணியாளர்கள், அவர்கள் இறந்து போனதற்கு முந்தையநாள் வரை பணியில் இருந்ததாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். அவர்களது குடும்பத்தினருக்கு 1மாதத்துக்குள் ஓய்வூதிய, பணிக்கால பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்தால், அது ரத்துசெய்யப்பட்டதாக கருதப்பட வேண்டும்.
வேலை நிறுத்தம் நடந்தபோது 52 ஊழியர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளை அடுத்துத் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதானஅனைத்து தண்டனைகளையும் அரசு வாபஸ் பெற்றது என்பது நினைவுகூறத்தக்கது.