தமிழகத்தில் 6 ராஜ்யசபா சீட்களுக்கு ஜூன் 21ல் தேர்தல்
டெல்லி:
தமிழகத்தில் காலியாகப் போகும் 6 ராஜ்யசபா எம்.பி. தொகுதிகளுக்கு வரும் ஜூன் மாதம் 21ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.
தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் வாக்களித்து இந்த எம்.பிக்களைத் தேர்வு செய்வர்.
இப்போது திமுகவைச் சேர்ந்த அக்னிராஜ், காதர், சங்கரலிங்கம், சிவசுப்பிரமணி, விடுதலை விரும்பி, அதிமுகவைச்சேர்ந்த மைத்ரேயன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக் காலம் வரும் ஜூன் 29ம்தேதியுடன் முடிவடைகிறது.
இப்போது சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தின்படி அதிமுகவுக்கு 4 எம்பிக்களும் திமுக, காங்கிரஸ், பா.ம.க.கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும். இதில் ஒன்றை பா.ம.கவுக்கு விட்டுத் தர திமுக உறுதியளித்துள்ளது.
மத்திய அமைச்சராகிவிட்ட அன்புமணியை இதன் மூலம் எம்.பியாக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இன்னொருஇடத்தில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 4ம் தேதி வெளியிடப்படுகிறது. 11ம் தேதி வேட்பு மனுதாக்கல் முடிகிறது,12ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும், 14ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். போட்டிஇருந்தால் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.