ஜெ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதான மாணவி தற்கொலைக்கு முயற்சி
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவைக் கொலை செய்ய சதி நடப்பதாக பொய்யான புகாரைக் கூறி கைதான சட்டக் கல்லூரிமாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் படித்து வருபவர் சோபியா. இவர் சமீபத்தில் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தின்போது அவரைக் கொலை செய்ய அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சதி செய்து வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சோபியாவின் புகார் பொய்யானது என்பது தெரியவந்தது. அலெக்ஸிஸ் சுதாகரின் செல்போனைத் திருடிய சோபியா அதை தட்டிக் கேட்டு திட்டிய அலெக்ஸிஸை அவமானப்படுத்தும் விதத்தில்தான் பொய்யான புகாரைக் கூறியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். இந் நிலையில், திருநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்ய முயன்றார் சோபியா.
உயிருக்குப் போராடிய நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் சோபியா மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications