பரிசாக வந்த ஆட்டுக்குட்டி!
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் பலவிதமான பரிசுப் பொருட்களை அளித்து கருணாநிதியை மகிழ்வித்தனர். பரிசுப் பொருட்களில் ஆட்டுக் குட்டியும் ஒன்று என்பதுதான் விசேஷம்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று 81 வயது பிறந்தது. முத்து விழாவாக இதை திமுகவினர் கொண்டாடினர். இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் அமர்ந்து தொண்டர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
திமுகவினர் பலவிதமான பரிசுப் பொருட்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தலைவரைப் பார்த்து வாழ்த்தி மகிழ்ந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற்றியும், இந்த நேரத்தில் சேர்ந்து கொண்டதால் திமுகவினர் மத்தியில் படு உற்சாகம் காணப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக தனது பிறந்த நாளை பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடவில்லை கருணாநிதி. எனவே இந்த முறை நடந்த பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி விட்டனர் திமுகவினர்.
சால்வைகள், பொன்னாடைகள் முதல் பல வகையான பரிசுப் பொருட்களால் கலைஞர் அரங்கமே திணறியது. சிலர் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அதை கருணாநிதிக்குக் கொடுத்தனர். இதேபோல, முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம் ஆகியவற்றாலும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
ராதாகிருஷ்ணன் என்ற தொண்டர் ஒரு ஆட்டுக்குட்டியைப் பரிசாக அளித்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த தொண்டர்கள் 81 தட்டுக்களில் சாக்லேட், பிஸ்கட், இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வைத்து அதை பரிசாகக் கொடுத்து கருணாநிதியை அசத்தினர்.
பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கருணாநிதிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறினர்.












Click it and Unblock the Notifications