ஆளுநருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென்று சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல மாநில ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. அவர்களில் ராம்மோகன் ராவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ராவ் அங்கு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களைப் பார்த்துப் பேசினார்.
இந் நிலையில் இன்று காலை ஜெயலலிதா திடீரென்று ஆளுநரை சந்தித்துப் பேசினார். 50 நிமிட நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். ஆளுநரை சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டதால் சந்திக்க வந்தேன்.
அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா என்பதை இப்போது கூற முடியாது. மக்கள் விருப்பத்திற்கு ஏற்பவே பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்தார் அவர்.
ஆளுநரை ஜெயலலிதா சந்தித்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.