காங்கிரசில் இணைகிறது ப.சியின் காங். ஜனநாயக பேரவை
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கலைக்கப்படுகிறது. அந்தக் கட்சி காங்கிரசில் இணைகிறது.
இக் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. சென்னையில் நடந்த இக் கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்கவில்லை.
பட்ஜெட் தயாரிப்பில் அவர் மும்ரமாக இருப்பதால் அவரது சார்பில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் பங்கேற்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.- கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வள்ளல் பெருமான் தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் கட்சியை காங்கிரசில் இணைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
1996ம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவான் முடிவை எதிர்த்து மறைந்த மூப்பனார் தலைமையில் காங்கிரசில் இருந்து வெளியேறினார் ப.சிதம்பரம். பின்னர் அதே த.மா.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே 2001ல் கூட்டணி ஏற்பட்டபோது அதை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை உருவாக்கினார்.
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த சிதம்பரம் இரு இடங்களில் தனது ஆட்களை நிறுத்தி வென்றார். அதில் ஒரு எம்.எல்.ஏவான புரசைவாக்கம் ரெங்கநாதன் திமுகவில் சேர்ந்துவிட்டார். வள்ளல் பெருமான் மட்டுமே சிதம்பரத்துடன் தொடர்ந்து துணை நின்றார்.
இந் நிலையில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு எம்பியாகி மத்திய நிதியமைச்சம் ஆகிவிட்ட சிதம்பரம் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசிலேயே ஐக்கியமாக முடிவு செய்துவிட்டார்.