காவிரி ஆணையத்தை கூட்ட கோருகிறார் ஜெ
சென்னை:
காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமலாக்குவதற்கான வழிவகைகளை ஆராய காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும். வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான பார்முலாவை இக் கூட்டத்தில் வகுக்க வேண்டும்.
இந்த பார்முலா உருவாக்கப்பட்டு, அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டால் இந்த வருடமாவது தமிழக விவசாயிகள் பலன் பெறுவார்கள். இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் எப்போதுமே மதித்து நடந்ததில்லை என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
கர்நாடகம் நீரைத் தர மறுத்ததால், கடந்த இரு ஆண்டுகளாகவே குறுவைப் பயிருக்குத் தேவையான நீரை மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் திறந்து விட முடியாமல் போய்விட்டது. அதே போல சம்பா பயிருக்கும் எங்களால் போதிய நீரை வழங்க முடியவில்லை.
இப்போது மேட்டூர் அணையில் 4.5 டி.எம்.சி. நீர் தான் உள்ளது. இதனால் இந்த ஆண்டும் அணையைத் திறக்க முடியாத நிலையே நிலவுகிறது. போதிய மழை பெய்யமாமல் போகிற காலத்தில் இருக்கும் நீரை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்து 2001ம் ஆண்டு அக்டோபரிலேயே ஒரு பார்முலாவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மத்திய நீர்வளக் கமிஷனின் உருவாக்கிய அந்த பார்முலா இதுவரை இறுதி செய்யப்படவில்லை. அதை காவிரிக் கண்காணிப்புக் குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடந்த கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், இந்த பார்முலாவை காவிரி ஆணையத்தின் முன் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனால் காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, வறட்சி கால நீர் பங்கீடு குறித்த திட்டத்தை இறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
காவிரி விஷயத்தில் ஆணையக் கூட்டம் நடத்துவதெல்லாம் வேஸ்ட், இதற்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும் என இதுவரை முதல்வர் ஜெயலலிதா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காவிரி தொடர்பாக இன்று திமுக கூட்டணி கூட்டம் நடத்திய நிலையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா அவசரமாய் கடிதம் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications