தயாரிப்பாளரை சுட்ட நடிகர் பாலகிருஷ்ணா
ஹைதராபாத்: தயாரிப்பாளரை துப்பாக்கியால் சுட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இவர் ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவின் மகனாவார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள பாலகிருஷ்ணாவை நேற்று முன் தினம் தயாரிப்பாளர் சுரேஷ், ஜோதிடர் சத்ய நாராயணா ஆகியோர் வீட்டில் சந்தித்துப் பேசினர். மூவரும் குடித்தனர்.
தமிழில் 'சாமி' படத்தை தயாரித்தவர் தான் இந்த சுரேஷ். பாலகிருஷ்ணாவை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணாவை வைத்து இவர் எடுத்த 'லட்சுமி நரசிம்மா' என்ற படம் தோல்வியடைந்தது.
இந்தப் படத்தால், தான் நஷ்டப்பட்டதாக சுரேஷ் கூறியதால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து வந்தது.
இந் நிலையில் பாலகிருஷ்ணாவை அவரது வீட்டில் சந்தித்து சுரேசும், ஜோதிடர் சத்யநாராயணாவும் தண்ணி அடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். போதை உச்சிக்கு ஏற இவர்களுக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் இடையே அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது 'புல் மப்பில்' இருந்த பாலகிருஷ்ணா, தனது ரிவால்வர் துப்பாக்கியால் இருவரையும் சுட்டார். பலத்த காயங்களுடன் இருவரும் ஹைதரபாத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுரேசின் சிறுநீரகத்தில் குண்டு பாய்ந்ததால், சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. ஜோதிடரின் கல்லீரல் சேதமடைந்துவிட்டது. முதுகெலும்பும் குண்டுபட்டு சிதறியுள்ளது. இருவருமே உயிருக்கு போராடி வருகின்றனர்.
இருவரையும் துப்பாக்கியால் சுட்ட சிறிது நேரத்தில் பாலகிருஷ்ணா இன்னொரு தனியார் மருத்துவமனையில் போய் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி அட்மிட் ஆகிவிட்டார். அவரது கையிலும் காயம் இருந்தது.
துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்த போலீசார் பாலகிருஷ்ணாவின் வீட்டுக்குப் போனபோது, ரத்தக் கறையெல்லாம் துடைக்கப்பட்டு பளிச்சென்று, எதுவும் நடக்காதது போல இருந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த இரு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
ரத்தக் கறை தோயந்த துணிகளும் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்ததாகக் கருதப்படும் பாலகிருஷ்ணாவின் வீட்டு வேலைக்காரப் பெண், டிரைவர் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாலகிருஷ்ணா மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது, ஆந்திராவில் பாலகிருஷ்ணாவின் மைத்துனர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி போய் அங்கு காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்துவிட்டதால், பாலகிருஷ்ணா கைது செய்யப்படுவது உறுதி என்று தெரிகிறது.
பாலகிருஷ்ணாவைக் கைது செய்யக் கோரி சட்டசபையிலும் குரல்கள் ஒலித்து வருகின்றன.
கைதில் இருந்து தப்ப தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்கும் பாலகிருஷ்ணா, இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் தஞ்சம் புகுந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே அவரது ரசிகர்களும் குவிந்துள்ளனர்.
போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் கைதாகலாம் என்று தெரிகிறது.
துப்பாக்கிச் சூட்டை பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா நேரில் பார்த்ததாகத் தெரிகிறது. அவரிடமும் விசாரணை நடக்கும் என்பதால், அதைத் தவிர்க்க வசுந்தரா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், மன நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் மூலமாக செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறது பாலகிருஷ்ணாவின் தரப்பு.
எப்போதும் முழு மேக்-அப், மண்டையில் விக்குடன் முழுக்க, முழுக்க மசாலா படங்களில் நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவிக்கும் இவருக்கும் தான் இப்போது கடும் போட்டி.