டெல்லி செல்லும் எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் பங்கேற்பு
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்திக்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் கலந்து கொள்ளும் என்று நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையில் தமிழக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டெல்லி செல்லவுள்ளனர். இந்தக் குழுவில் அதிமுகவும் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரி திமுக சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்திற்கு மாநில நிதியமைச்சர் பொன்னையன் பதில் அளித்துள்ளார். அதில், காவிரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்க்கச் செல்லும் தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் இடம்பெற ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தமிழக எம்.பிக்கள் குழுவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இதுதொடர்பாக நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன் தங்களைத் தொடர்பு கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவில் அதிமுகவும் கலந்து கொண்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக காவிரிப் பிரச்சினை தொடர்பாக அதிமுக எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக ஒத்துழைப்பு கொடுக்காது, அதேபோல, திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அதிமுக பங்கேற்காது என்பது நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications