காவிரி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும்: மத்திய அரசு
டெல்லி:
காவிரிப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணவும், நதிகளை இணைப்பது தொடர்பான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கலாம் கூறியுள்ளார்.
14வது நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் கொள்கைத் திட்டங்களை வெளியிட்டார்.
அதன் விவரம்:
நாட்டின் பாசன வசதியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய நதிகளை இணைப்பது தொடர்பான சுற்றுச்சூழல், தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்படும்.
காவிரிப் பிரச்சனை போன்ற நீண்ட கால நதி நீர் பங்கீட்டு விவகாரங்களை அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் சுமூகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதவாதத்துக்கு எதிராக சட்டம்:
குஜராத்தில் நடந்த வன்முறைகள் மிகக் கொடுமையானவை. அது போன்ற மதக் கலவரங்கள் நடக்காதவண்ணம் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
சிறுபான்மையினர் கமிஷனுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்துக்கு இந்த அரசு முக்கியத்துவம் தரும். அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடனும், நட்புடனும் வாழச் செய்ய சட்டப்படியான வழிவகைகள் செய்யப்படும்.
நாட்டின் மதசார்பின்மையைக் குலைக்க முயலும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அயோத்தி விவகாரம்:
அயோத்தி பிரச்சனையின் நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கும். அதே நேரத்தில் பிரச்சனையை பேசித் தீர்க்க இரு தரப்பினரும் விரும்பினால் அதற்கு அரசு உதவத் தயாராக உள்ளது. ஆனால், இதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
கடந்த அரசு கல்வியிலும் மதத்தைப் புகுத்தியது. பள்ளிப் பாடங்களில் மதவாதத்தைக் கலைந்தது. இது சரி செய்யப்படும்.
வேலைவாய்ப்பு:
கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளியவர்களுக்கு வருடத்தில் 100 நாட்களாவது வேலை கிடைக்கச் செய்யும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் நிறைவேற்றப்படும்.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், ஊழல் இல்லா திறந்த நிர்வாகத்தை வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது.
தனியார்துறையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த தேசிய அளவிலான விவாதம் தொடங்கப்படும்.
இவ்வாறு கலாம் வாசித்த மத்திய அரசின் கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
கடுமையான முகத்துடன்...
ஜனாதிபதி கலாம் வாசித்த, மத்திய அரசின் அறிக்கை, முந்தைய பா.ஜ.க. அரசைத் தாக்கி அமைந்திருந்ததால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. எம்.பிக்கள் கடுமையான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
குறிப்பாக குஜராத், பொடா விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி அறிக்கை வாசித்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் மிக வேகமாக மேஜைகளைத் தட்ட, பா.ஜ.கவினர் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications